வெள்ளி, 13 அக்டோபர், 2017

யுனெஸ்கோ இல் இருந்து அமெரிக்க இஸ்ரேல் விலகுகிறது

மின்ம்பலம் :யுனேஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளன.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ இஸ்ரேலுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வந்தது. இந்நிலையில், அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா நேற்று (அக்.12) அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை துணிச்சலான மற்றும் அறம் சார்ந்த முடிவு எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல் தானும் விலகுவதாக அறிவித்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு அபத்தத்தின் கூடாரமாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு ஐ.நா. குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என யுனெஸ்கோவின் தலைவர் இரினா பொகொவா தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மைக்கு இழப்பு என்றபோலும் யுனென்கோவிற்கு அமெரிக்காவோ, அமெரிக்காவுக்கு யுனெஸ்கோவோ முக்கியமானதாக இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு யுனெஸ்கோ, பாலஸ்தீனத்திற்கு உறுப்பினராகும் அனுமதியை அளித்தது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அன்று முதல், ஐ.நா.வின் உறுப்பு அமைப்புகளுக்குத் தான் செலுத்திவந்த தொகைகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்திடம் ஐ.நா. இணக்கமாகச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விலகும் முடிவை அறிவித்துள்ளன எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எதிர்வினையாற்றக் கூடியது மற்றும் வெட்கக்கேடானது என பாலஸ்தீன தேசிய முனைப்பு கட்சியின் பொதுச் செயலாளர் முஸ்தபா பர்கோத்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில், ஐ.நா.வின் அனைத்து அமைப்புகளிலும் பாலஸ்தீனம் அங்கமாக இருக்கும். அப்போது அவை அனைத்திலும் இருந்து அமெரிக்கா விலகுமா? அவர்கள், அவர்களையே காயப்படுத்திக்கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோல், அமெரிக்காவின் முடிவு வருத்தத்தை ஏற்படுத்துவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால், யுனெஸ்கோ திட்டமிட்டுள்ள எண்ணற்ற திட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது.
இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: