சனி, 11 நவம்பர், 2017

சவுதியில் 201 பேர் கைது! ஊழலாம் .. கோட்டைக்குள் பதவி போட்டி ...


சவுதியில்  ஊழல்: 201 பேர் கைது!மின்னம்பலம் :சவுதியில் மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் அண்மையில் அந்நாட்டின் அதிகாரம் மிக்க இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக ஊழல் தடுப்பு கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு அமைக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிரடியாகச் செயல்படத் தொடங்கியது. முதல் நாளிலேயே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையதாகக் கூறி அந்நாட்டின் 11 இளவரசர்கள், 4 அமைச்சர்கள் மற்றும் 12 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரை கைது செய்தது. இதில் உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான இளவரசர் அல்வாலிடு பின் தலாலும் ஒருவராவார்.

இதையடுத்து வியாழக்கிழமை மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழல் செய்திருக்கலாம் என்று விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊழல் தடுப்பு கமிஷனில் ஒருவரான சவுதியின் அட்டர்னி ஜெனரல் சவுத் அல் மொஜப் கூறுகையில், “ஊழல் வழக்குகள் தொடர்பாக இதுவரையில் விசாரணைக்காக 208 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் ஏழு பேர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 201 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். சுமார் 1,700 வங்கிக் கணக்குகளின் மீது ஊழல் தடுப்புக் குழு சந்தேகம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: