வெள்ளி, 10 நவம்பர், 2017

மும்பையில் விற்பனையாகாத 3.5 லட்சம் குடியிருப்புகள்..

மும்பையில் விற்பனையாகாத குடியிருப்புகள்!
மின்னம்பலம் : உலக அளவில் மிகப் பிரபலமான நகரங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் முதன்மையான மெட்ரோ நகரமாகவும் கருதப்படும் மும்பையில் 3.5 லட்சம் குடியிருப்புகள் விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது.
சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் & வேக்ஃபீல்டு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான பிராப்ஸ்டேக் ஆகஸ்ட்டிலிருந்து தற்போது வரை மும்பை பெருநகரத்தில் குடியிருப்புகளுக்கான மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (ஆர்.இ.ஆர்.ஏ) பதிவு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில், “மகாராஷ்டிரா ஆர்.இ.ஆர்.ஏவில் ஆகஸ்ட் முதல் தற்போது வரை 6,70,339 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 52 சதவிகிதம் விற்பனையாகாமல் உள்ளன. அதாவது 3,50,713 குடியிருப்புகள் இதுவரையில் விற்பனையாகவில்லை.

பதிவு செய்யப்பட்டுள்ள 43 சதவிகித குடியிருப்புகளின் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்கும் குறைவாகப் பணிகள் தாமதமான நிறுவனங்கள் 15 சதவிகிதம் மட்டுமே உள்ளன. மேலும், மும்பையைப் பொறுத்தவரையில் குடியிருப்புகளின் விலை என்பது டெல்லி, புனே, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை விட 10 முதல் 15 சதவிகிதம் அதிகமாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: