வியாழன், 9 நவம்பர், 2017

7 லட்சம் வாங்கிய கடனுக்கு 76 லட்சம் கட்டியுள்ளேன்.. கந்துவட்டி தொடர்கதைகள் ...

7 லட்சம் வாங்கிய கடனுக்கு 76 லட்சம் கட்டியுள்ளேன்..! இது மற்றுமொரு கந்துவட்டிக் கொடுமையின் குரல்

கந்துவட்டிக் கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தீக்கிரையானதையடுத்து, தமிழகம் முழுவதும் கந்துவட்டி தொடர்பான புகார்கள் குவிந்துவருகின்றன. இன்று ,கோவை கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட ஒரு கந்துவட்டிப் புகாரைப் பார்த்து போலீஸாருக்கே தலை கிறுகிறுத்துப்போனது. கோவையை அடுத்துள்ள சவுரிபாளையம் பகுதியில், சுப்பிரமணி என்பவர் கந்துவட்டித் தொழில் செய்துவருகிறார். இவரிடம் குருராசன், மணிகண்டன், விஜயேந்திர பூபதி, கார்த்திகேயன் சாந்தகுமார் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து, தொழில் தொடங்குவதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். வாங்கிய பணத்தைவிட பல மடங்கு பணம் கொடுத்துவிட்டபோதும், சுப்பிரமணி விடாமல் பணம் கேட்டு துன்புறுத்துவதாக கோவை கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகார் குறித்து மணிகண்டன் கூறியதாவது, “நானும் என் நண்பர்களும் சேர்ந்து தொழில் ஆரம்பிப்பதற்காக எங்கள் நிலப் பத்திரத்தை வைத்து சுப்பிரமணியிடம் 7 லட்சம் ரூபாய் கடனாக வாங்கினோம். இதுவரை வட்டியும் முதலுமாக சேர்த்து  76  லட்சம் கட்டியிருக்கிறோம். ஆனால், இன்னும் 20 லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டுமென்று சுப்பிரமணி எங்களை வீட்டிற்கே வந்து மிரட்டுகிறார். எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சுப்பிரமணியின் தொல்லை தாங்க முடியாமல் சில மாதங்களாக தலைமறைவாக இருக்கிறோம். எங்களை சுப்பிரமணியிடமிருந்து போலீஸ்தான் காப்பாற்ற வேண்டும். எங்கள் பத்திரத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்றனர்.
குருராசன் என்பவர் வாங்கிய 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனுக்கு, இதுவரை  7 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளதாகவும் மணிகண்டன் தெரிவித்தார். மணிகண்டனின் புகார் தொடர்பாக, கோவை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை: