புதன், 8 நவம்பர், 2017

மோடி அரசை தைரியமாக எதிர்க்கும் நடிகர் யார்? கருத்துக் கணிப்பு !

vinavu.com :தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்னும் மீசை முளைக்காத சிறுவர்கள் கூட அடித்துப் பழக வசமாக சிக்கியிருக்கும் கைப்பிள்ளைகளாக பாஜக கும்பல் மாறி வருகிறது. மெர்சல் பட பிரச்சினையின் போது இவர்களுக்கு கிடைத்த ‘அர்ச்சனை அபிஷேகத்தை’  பார்த்தால் ஹிட்லருக்கே இரக்கம் வரும்.
இன்றைக்கு அரசியல் வெளியில் பேசப்படும் ஒரு பிரச்சினைக்கு கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்ற நிலையில், திரைப்படங்களில் எழுதிக் கொடுத்த எதுகை மோனை பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருந்த சினிமா நடிகர்களுக்கு இது புதிய சோதனையை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தையில் தக்க வைத்துக் கொள்வதற்காகவேணும் பாஜகவைத் தொட்டு பேச வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், இளைய தளபதியிலிருந்து தளபதியாக தனக்குத் தானே ’ப்ரொமோசன்’ கொடுத்துக் கொண்ட விஜய்,’மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி.யைப் பற்றி பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக பாஜகவின் தேசியச் செயலாளர் ஹரிஹர ராஜா சர்மா, அவரை ஜோசப் விஜய் என விளித்தார். இதற்கு தமிழகமே பொங்கினாலும் தளபதி விஜய் வெளிப்படையாக பொங்க வில்லை.
அடுத்தது கமலஹாசன். அதிமுக என்னும் செத்த பாம்பை ’லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிக் கொண்டிருப்பவர். நீட்டிற்கு எதிராக தமிழகமே பாஜகவை காறி உமிழ்ந்த போது ஒரு வார்த்தை பேசாமல், அதிமுகவை மட்டும் பொளந்து கட்டியவர். பணமதிப்பழிப்பு தவறு என ஆதாரம் இல்லாமல் ஒத்துக் கொள்ளமாட்டேன் என முதல் நாள் கூறிவிட்டு சில நாட்கள் கழித்து பணமதிப்பழிப்பை ஆதரித்ததற்காக தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.
மோடி அரசை தைரியமாக எதிர்க்கும் நடிகர் யார்?
  • 1.34% - ( 2 votes )
  • 6.04% - ( 9 votes )
  • 6.71% - ( 10 votes )
  • 85.91% - ( 128 votes )
முதல் நாள் ”என் நிறம் காவி அல்ல” என்றார். மறுநாள் ”கருப்புக்குள் காவியும் அடங்கும்” என்றார். பல ஆண்டுகளாக நான் ஒரு நாத்திகன் என்று கூறி வந்தார். சமீபத்தில் ”என்னை நாத்திகன் என்று அழைக்காதீர்கள், பகுத்தறிய விரும்புகிறவன் என அழையுங்கள்” என்கிறார். சமீபத்தில் அவர் பேசிய ‘இந்துத் தீவிரவாதம்’ தற்போது நானும் இந்துதான், இந்துக்களை சிறுமைப்படுத்தவில்லை என்பதாக மாறியிருக்கிறது.
இறுதியில் பிரகாஷ்ராஜ். பாஜக, சங்க பரிவார கும்பல், எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கொண்டாடியதைக் கண்டு பொது மேடையிலேயே கொதித்தெழுந்து வாய் திறக்காத மோடிக்கு சிறந்த நடிகர் பட்டம் கொடுத்தவர். உ.பி. முதல்வர் ஆதித்யநாத்-ஐ, “இவர் சி.எம்.-மா இல்லை பூசாரியா?” எனவும் பகிரங்கமாக பேசினார். இதன் தொடர்ச்சியாக கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா, வாய்க்கு வந்தபடி பிரகாஷ்ராஜைக் கடுமையாகச் சாடினார்.
எனினும் எனது கருத்தைத் திரும்பப் பெறமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார் பிரகாஷ்ராஜ். சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்தார். பன்சாரே, தபோல்கர், கல்புர்கியின் தொடர்ச்சியாக கவுரி லங்கேஷின் கொலையை தான் பார்ப்பதாகக் கூறி சங்கப் பரிவார கூலிப்படையான சனாதன் சன்ஸ்தாவை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அடுத்தது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான ’புரட்சித் தளபதி’ விஷால். தயாரிப்பாளர் சங்கத் தலைவராகும் முன்னரே திருட்டு விசிடியைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு குண்டர்களுடன் பர்மா பஜார் கடைகளுக்குள் அத்து மீறி நுழைந்து அட்டகாசம் செய்தவர். மெர்சல் பட விவகாரத்தில் ஹரிஹரி ராஜா சர்மா அவர்கள் பகிரங்கமாக திருட்டு விசிடியில் படம் பார்த்தேன் என கூறியதும் ‘கொதித்தெழுந்து’ பக்குவமாக தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
விளைவு, புரட்சித் தளபதியின் அலுவலகங்களில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. மெர்சல் பட விவகாரத்தில் ”நானும் மதுரக்காரன் தான்டா” என நெஞ்சை விடைத்த புரட்சித் தளபதி ”மதுர வந்து …. கடலூர் பக்கத்துலயோ பண்ருட்டி பக்கத்துலயோ தான் இருக்குன்னு நினைக்கிறேன்” என ஜகா வாங்கினார். தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வருமான வரித்துறைக்கும் ஹரிஹர ராஜா சர்மாவிற்கு எதிராக தான் விடுத்த அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்
இந்நிலையில் இன்றைய கருத்துக் கணிப்பு:
மோடி அரசை தைரியமாக எதிர்க்கும் நடிகர் யார்?
அ) விஷால்
ஆ) கமல்
இ) பிரகாஷ்ராஜ்
ஈ) விஜய்

கருத்துகள் இல்லை: