வியாழன், 9 நவம்பர், 2017

கமல் ,,, கறுப்பு சட்டைக்குள் ஒரு வைணவ நடிகன் !

நடிகர் கமலை ஒரு முற்போக்காளனாகக் காட்டுகிற நண்பர்களின் பதிவுகள் எரிச்சலை தருகின்றன.
உண்மையில் திரைப்படங்கள் மூலமாக கமல் சொல்லவருகிற விடயங்கள் என்ன? ஒரு சிறந்த நடிகன் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஏதோ கருத்துருவாக்கியை போல முன்னுதாரண மாக்குகிறார்கள்.
கறுப்புச் சட்டைக்குள் ஒளிந்து கொண்டு வைணவ சமயத்தை பிரதிநிதித்துவம் செய்கிற தீவிர சைவசமய எதிர்ப்பாளனாகத்தான் கமலின் திரைப்படங்களை வைத்து கமலை கணித்திருக்கிறேன்.
அவர் இயக்கி அவர் நடித்த திரைப்படங்களில் அவரின் பாத்திரங்களின் பெயர்களைப் பாருங்கள்
1.மகாநதி திரைப்படத்தில் "கிருஷ்ணசாமி"யாக வருவார்
2.குருதிப்புனல் படத்தில் "ஆதிநாராயணன்'
3.சாச்சி 420 படத்தில் "லக்‌ஷ்மி கோட்லி"
4.காதலாகாதலா திரைப்படத்தில் "ராமலிங்கம்"
5.ஹேராம் படத்தில் "சக்கிற் ராம்"
6.ஆளவந்தான் திரைப்படத்தில் "நந்து(நந்தகோபன்)"

7.பஞ்சதந்திரம் திரைப்படத்தில் "ராமச்சந்திரமூர்த்தி "
8.மும்பைஎக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் "அவினாஷ"்
9.தசாவதாரம் திரைப்படத்தில் "கோவிந்தராஜன் , ராமசாமி, ரங்கராஜநம்பி , பலராம்நாயுடு , வின்சன் பூராகவன் ,அவதார்சிங்'
இவைகள் தவிர பதினாறு வயதினிலே படத்தில் "கோபாலகிருஷ்ணனாகவும்" வேட்டையாடு விளையாடுவில் "ராகவனாகவும்' பெருமாள் பெயர்களில் வந்தார்.
மற்றைய கமல் இயக்கி கமல் நடித்த திரைப்படங்களில் கமலின் பாத்திரத்தில் வைணவப் பெயர்களை காட்டமுடியாத கட்டாயத்தில் தான் கமல் பெருமாளின் பெயர்களை தவிர்த்திருக்கிறார் என்று சொல்லுவேன்.
1.உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் பாத்திரத்தின் பெயர் சுட்டப்படவில்லை.
2.விஷ்வரூபத்தில் இசுலாமியராக பெருமாளின் பெயரை வைக்க முடியாது.
3.தேவர் மகன் படத்திலும் சரி
4.விருமாண்டி படத்திலும் சரி . பெருமாளின் பெயரை அத்திரைப்படங்களில் கமல் நடித்த பாத்திரங்களிற்கு வைத்து விடமுடியாது. ஏனெனில் தேவர் சமுதாயத்தில் யாருமே வைணவப் பெயர்களை வைப்பதில்லை. ஆனால் ரெண்டு படங்களிலுமே சைவக்குடிகள் கொலையாளர்களாக வன்முறை வெறியர்களாக காட்டப்பட்டிருக்கும்.
விருமாண்டி திரைப்படத்தில் நாயகனின் பெயர் சண்டியர் என்று வைப்பதாக இருந்தது. அதற்கு எதிர்ப்புக்கள் வந்தபோது "கிருஷ்ணசாமி" என்று வைக்கலாம் என்றிருந்தேன் என்று கமல் சொல்லியிருந்தார். கடைசியாக விருமாண்டியாக பெயர் வைக்கப்பட்டது.
கமல் நடித்த வேற்று மொழிப்படங்கள் விஷ்ணுவிஜயம் , புஷ்பகவிமான் , ஒக்க ராதா இட்டரு கிருஷ்ணலு , ராசலீலா , திருவோணம் என்று பெருமாளின் பெயர்களில் நீளுகின்றது.
மிகச்சாதாரணமாக சினிமா பார்க்கிற எனக்கு கமலின் படங்களில் சைவ எதிர்ப்பைத்தான் காணமுடிகிறது.
அன்பே சிவம் என்று ஒரு திரைப்படம் பார்த்திருக்கிறேன். அதில் கம்யூனிஸ்ட்டாக கறுப்புச்சட்டை போட்டு நடித்திருப்பார்.
கம்யூனிஸ்ட்டுக்கு எதிரான வில்லன் முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கோட்சூட் போட்டு மல்ரிநசனல் கம்பனியாளனாக வரவில்லை. வில்லன் நாசர் திருநீறு பூசிக்கொண்டு தென்னாடுடைய சிவனே போற்றி என்று நிமிடத்துக்கு நிமிடம் சிவனை துதித்துக் கொண்டு வருவார். கமல் வரைந்த சிவனின் ஓவியத்தையும் சிவபக்தர் வில்லன் வரையச்சொல்கிற அளவுக்கு சிவபக்தனாக இருப்பார்.
தசாவதாரம் திரைப்படத்தில் முழுமையும் பெருமாள் தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
சோழன் ரங்கராஜ நம்பியை பெருமாள் சிலையோடு கட்டி கடலில் போடுகிறான். ரங்கராஜ நம்பியின் குடிகளான வைணவர்கள் மிக அப்பாவிகளாக கொள்கையுறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். சோழனின் சைவத்துக்குடிகள் வன்முறையாளர்களாகவும் சகிப்புத்தன்மை துளியும் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
மிக உச்சம் ரங்கராஜனின் மகன் அப்பாவியாக அசினின் இடுப்பில் இருப்பான். அதே வயதொத்த இன்னொரு சைவச்சிறுவன் தான் முதலாவது கல்லை ரங்கராஜன் மீது எறிகிறான். தோற்றத்தில் நாம் தொழுதெழுகிற திருஞான சம்பந்தர் போலவே கல்லெறிகிற அவனும் இருக்கிறான். பெருமாளின் சிலை தான் மசூதி தேவாலயங்களின் அழிவுகளின் பின்னும் கம்பீரமாக நிற்பதாக காட்சிகள் முடியும்.
விருமாண்டி என்று ஒரு படம்.
அடிப்படையில் தேவர் சமுதாயம் பெருமாளை வழிபடாத சிவனை வழிபடுகிற சைவர்கள். அதில் கொத்தாளத்தேவர் என்று வில்லனாக வருகிற பசுபதி திருநீறு பூசி படம் முழுவதும் வருகிறான். தேவர் சமுதாயம் விருமாண்டியை தவிர மிகுதிப்பேர் வன்முறையாளர்களாக சொத்துக்காக குடும்பங்களை அழிக்கிறவர்களாக வருவார்கள்.
ஆனால் நாயக்கராக வருகிற நெப்போலியன் மிக நல்லவராகவும் அமைதியை விரும்பும் மக்களாகவும் காட்டப் பட்டிருப்பார்கள். இவ்வைணவக் குடிகளான நாயுடுக்களை உயர்த்தியே படம் முழுவதும் நகரும்.
அது சரி. விருமாண்டியும் ஆரம்பத்தில் இருந்து கொத்தாளத் தேவனைப்போல திருநீறு தான் பூசித்திரிகிறான்.
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் சிவப்பு நிறத்தில் விருமாண்டியின் நெற்றியில் "நாமத்தை" வைத்தது எதைக் காட்டுகிறது?
இவைகள் தவிர உத்தமவில்லனில் நரசிங்க அவதாரம் காட்டியிருப்பார்.
"ஆளவந்தான்" என்கிற பெருமாளின் பெயரிற்கும் அந்தத் திரைப்படத்தின் கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
இஸ்லாமிய தீவிரவாதிகளை கொல்கிற படத்துக்கு பகவத்கீதையை அருளிய கிருஷ்ணன் அர்ஜுன்னுக்கு காட்டிய "விஷ்வரூபம்" என்று எப்படிப்பெயர்வந்தது?
தசாவதாரத்தை ஹேராம்மை பற்றிச் சொல்லவே தேவையில்லை.எல்லாமே வைணவத்துப்பெயர்களே.
யப்பானில் ( கூட ) கல்யாணராமன் தான்...
அடுத்த படம் சபாஷ் நாயுடு என்கிறார்கள். பாத்திரத்தின் பெயர் "பல்ராம் நாயுடு" தானே
ஆண்டவர் என்கிறார்கள். ஆண்டவர் தான். ஆனால் ஆழ்வார்பேட்டை ஆண்டவரே தான்.
நன்றி: Thuvaragan Velummylum
(பின்குறிப்பு: இதெல்லாம் எனக்கு 2007 லேயே தெரியும். ஆனால் சொன்னால் யார் நம்புறாங்க? கமல் படங்கள் வைணவ பெயரிலும் ரஜினி படங்கள் சைவ பெயரில் வருவது இங்கே வாடிக்கை. - பீம் பிரபா காந்தி.)

கருத்துகள் இல்லை: