வியாழன், 9 நவம்பர், 2017

பல லட்சம் பேரின் பணத்தை ஸ்வாகா செய்த பிரதமர் நரேந்திர மோடி!

Chinniah Kasi ‘  :  பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ‘பண மதிப்பு நீக்கம்’ என்ற தாக்குதல், நாட்டு மக்களுக்கு மாறாத ரணமாக, ஆறாத வடுவாக இன்றும் அவர்களை துயரத்திலேயே வைத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி ஏற்படுத்திய துயரத்தின் ஓராண்டு, நாடு முழுவதும் புதன்கிழமையன்று கறுப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட 18 எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை நடத்தினர்.இந்நிலையில், பொதுமக்களும் தாங்கள் சுமக்கும் துயரத்தின் ஓராண்டை, ட்விட்டரில் #De‘MoDi’saster(மோடி எனும் பேரிடர்) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி,தங்களின் வடுக்களை தடவிப்பார்த்துக் கொண்டனர். இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே நாடு முழுவதும் டிரெண்டானது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு, திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது, ஏறக்குறைய அது ஒரு அறிவிக்கப்படாத `அவசரநிலைப் பிரகடனமாகவே’ இருந்தது. கையிலிருக்கும் ஓரிரு பணத்தாள்களும் செல்லாது என்ற அறிவிப்பைக் கேட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 100 ரூபாய் நோட்டுக்களை பெறலாம் என்று ஏடிஎம் மையங்களை நோக்கி ஓடினால், 100 ரூபாய்வரவில்லை. அடுத்த 2 நாட்களுக்கு வங்கிகளும் செயல்படவில்லை. ஏடிஎம்-களும் இயங்கவில்லை. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல், மக்கள் தவித்து போயினர். அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஏழை மக்கள் கிட்டத்தட்ட பிச்சைக்காரர்கள் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்த சில நாட்கள் கழித்து வங்கிகள் திறந்தாலும் நீண்ட வரிசை. பல மணிநேரம், நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய துயரம். அப்படியும் ரேசன் விநியோகம் போல குறிப்பிட்ட தொகைதான் கிடைத்தது.
இரண்டாவது முறையாக யாரும் வந்துவிடக் கூடாது என்று, திருடனை கண்டுபிடிப்பது போல, மக்களின் கையில் வங்கி அதிகாரிகள் ‘மை’ வைத்தனர். பெரும் பணக்காரர்கள் வங்கிகளின் பின்வாசல் வழியாக சென்று, அதிகாரம் படைத்தவர்களின் துணையுடன் வேண்டிய அளவு பணத்தை மாற்றிச் சென்றனர். ஏழைகளோ, வங்கிகளின் முன்னால் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் காத்திருந்தனர். வரிசையில் காத்திருந்தே 165 பேர் பலியாகினர். இப்படி உயிரைக் கொடுத்து வங்கிகளில் புதிதாக பெற்ற 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களுக்கு வெளியில் சில்லரை கிடைக்காததால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மறுபடியும் பட்டினி. 100 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கும் ஏடிஎம் இயந்திரங்களைத் தேடி- திறந்திருக்கும் ஏடிஎம்களைத் தேடி- செயல்படும் இயந்திரங்களைத் தேடி... இரவு முழுவதும் ஒடியே பல கோடிப் பேர் களைத்துப் போயினர்.
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் நீண்ட வரிசை. ஸ்வைப் மிஷின் மூலம் அங்கு பணம் செலுத்தலாம் என்றால், நெட்வொர்க் நெருக்கடியால் மிஷினே குழப்பமடைந்து, பல லட்சம் பேரின் பணத்தை ஸ்வாகா செய்தது. அலறியடித்த பலர் வாகனங்களை உருட்டிக் கொண்டே சென்றனர்.நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்துவதில் கூட சிக்கல். திருமண மண்டபத்திற்கு வாடகை தர முடியவில்லை.திருமணத்திற்கு புதிய துணிமணிகள்.. ஏன், தாலி வாங்குவதற்குக் கூடத் தடை. அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை. சிறு வியாபாரிகள், சிறு-குறு தொழில் முனைவோர் தங்களின் கைமுதலை வங்கியில் போட்டுவிட்டு, கடைகளை இழுத்து மூடி, புதிய ரூபாய் நோட்டுக்காக மாதக்கணக்கில் காத்திருந்தனர். போதாக்குறைக்கு, வங்கியில் செலுத்திய பணத்திற்கு கணக்கு காட்டச் சொல்லியும் சித்ரவதை.கொள்முதல் நடக்கவில்லை;
உற்பத்திக்கு தேவையில்லா மல் போனது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்தனர். பலலட்சம் பேர் வறுமையின் கோரப்பிடியால் தெருவில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் பலர் மாண்டனர். நாட்டின் பொருளாதாரமே 5.7 என்றும் 3.7 என்றும்கடுமையாக சரிந்து, சதையற்றஎலும்புக் கூடாக மாறி விட்டது. மக்களும் இப்போதுவரை துயரத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றனர்.இந்நிலையிலேயே, பிரதமர் மோடி ஏற்படுத்திய பேரிடரின் ஓராண்டை நினைவுகூரும் வகையில், #De‘MoDi’saster என்று பேரிடருக்கு மோடியின் பெயரையே சூட்டி, படித்த இளைஞர்கள், மாணவர்கள் அதை நாடு தழுவிய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்

கருத்துகள் இல்லை: