வியாழன், 9 நவம்பர், 2017

எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை - டி.டி.வி.தினகரன் ஆவேசம்!

நக்கீரன்: மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே தனது மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் ரெய்டுகள்,  இந்த ரெய்டுகளுக்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் எனவும் எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் நாங்கள் அஞ்ச போவதில்லை எனவும் டிடிவி தினகரன் ஆவேசமாக கூறினார்.
இன்று காலை டிடிவி தினகரன் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் பண்ணை வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன் கூறியது..>எனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. சசிகலாவும், தினகரனும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது. எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பயம் என்பது கிடையாது. யார்யாரெல்லாம் நாங்கள் வரக்கூடாது என்று நினைக்கிறார்களோ, அவர்கள் எங்கள் மீது வழக்குகளை போடலாம், என் சித்தியை குற்றவாளியாக அறிவித்து கைது செய்யலாம். எங்களை தேர்தலில் நிற்கவிடாமல் செய்தாலும் இதனை நாங்கள் விடமாட்டோம்.


வருமான வரித்துறையை யார் தூண்ட முடியும்? பழனிசாமியா? மத்திய அரசுதான். அன்புநாதன் டைரியில் உள்ளவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? சேகர் ரெட்டி டைரியில் உள்ளவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இது எங்களை மிரட்டி பார்க்கும் செயல். பெங்களூரு புகழேந்திக்கும் எனக்கும் என்ன வியாபார டீலிங்கா நடக்கிறது? கர்நாடகா மாநில செயலாளராகிய அவர் வீட்டில் ரெய்டு நடத்துகின்றனர்.

30 வயதிலே நான், என் சித்தி, என் தம்பி எல்லோரும் ஜெயிலில் இருந்தவர்கள். அப்போதே நாங்கள் இதைக்கண்டு அஞ்சியதில்லை. தூக்குதண்டனை போடமுடியாது இவர்களால். 20 வருடம் சிறையில் அடைத்தாலும் கவலையில்லை. எனக்கு தற்போது 45 வயதாகிறது. 75 வயதில் வெளியில் வந்துகூட, யார் இதற்கெல்லாம் காரணமோ அந்தக் கட்சியை தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் செய்வோம். இதில் மத்திய அரசாங்கம் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதைக்கண்டு பயப்படப்போவதில்லை..

ஜெயா டிவி நிறுவனத்தை இப்போது வந்து இப்படி தாக்க எண்ண காரணம்? எங்களை மிரட்டி பார்க்க நினைக்கிறார் எடப்பாடி. அவர்களது ஆட்சி கவிழும் நிலைக்கு வந்துவிட்டது. இதை பாதுகாப்பதற்காக மத்திய அரசாங்கம் இதனை செய்கிறது. 180 வீடுகளில் ரெய்டு விட்டால் என்ன? யாரையும் கைது செய்தால்கூட யாரும் பயப்படப்போவதில்லை. எல்லாவற்றையும் துணிச்சலாக சந்திக்கக் கூடிய வீரமிக்க மண்ணில் பிறந்தவர்கள் நாங்கள்.

கொள்ளிக்கட்டையால் தன்னைத்தானே சொரிந்து கொள்கிறார்கள். தான் தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானே தினகரன் வீட்டில் ரெய்டு என்பதை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். இதுவரை என் வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. ஒரே ஒரு அதிகாரி மட்டுமே வந்து போயுள்ளார்.

பாண்டிச்சேரியில் எனது பண்ணை வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அங்கு என்ன இருக்கும் - சாண உரம்தான் இருக்கும். அது தனிமையில் இருக்கும் வீடு அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் எதையாவது வைத்து எடுத்துவிடக்கூடாது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறது. அதனால் அச்சமில்லை. என் நண்பர்களும், வழக்கறிஞர்களும் அங்கு சென்றுவிட்டனர்.

ஜெயலலிதாவின் வேண்டுகோளால் அவரது ஆசியில் நாங்கள் ஆரம்பித்தது ஜெயா டிவி. அதில் என்ன நடந்துவிட போகிறது? இப்படிதான் ஜெ.ஜெ. டிவியை முடக்கினார்கள். அதன்பிறகு ஜெயா டிவி வந்தது. இதெல்லாம் மத்திய அரசு இந்த மாநில அரசில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக செய்வது, எந்த ரெய்டு விட்டால் என்ன? அமலாக்கத்துறை, சிபிஐ என எதன்மூலம் கைது செய்தால் என்ன? யார் பயப்படப்போகிறார்கள்? என்ன செய்துவிட முடியும்? எதற்கும் அஞ்சப்போவது இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். <">படம் - ஸ்டாலின்

கருத்துகள் இல்லை: