சனி, 9 டிசம்பர், 2017

BBC : பிட் காயின் வர்த்தகம் என்றால் என்ன ? எச்சரிக்கும் ரிசேர்வ் வங்கி ..

டிஜிட்டல் பணமான பிட்காயின் மதிப்பு அதி வேகத்தில் மேலே ஏறிச் செல்கிறது. இதனால் உலகம் முழுதும் சிலருக்கு வாட்டம், வேறு சிலருக்கு ஊட்டம். கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றான இதன் அபரிமித வளர்ச்சியை குறித்த இந்தியாவின் நிலையை பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் டேவினா குப்தா. பிட்காயினின் மதிப்பு காளை வேகத்தில்
பாய்வதைப் பல்வேறு தரப்பினர் வரவேற்றாலும், வளர்ந்து வரும் நாடுகளின் நிதிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் இதைப் புரிந்துகொள்ள முயல்கின்றன.< பிட்காயின் பரிமாற்றங்களை சீனாவின் மத்திய வங்கி மொத்தமாக நிறுத்தியுள்ளது. இந்தோனேஷியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பிட்காயின்களை ஒரு பணம் செலுத்தும் முறையாக இருப்பதற்குத் தடை விதித்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, பிட்காயின் என்பது "காகித பணம்" போன்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரம் பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கென்று வழிகாட்டு நெறிமுறைகளும் எதுவும் இல்லை.

குறிப்பான வழிகாட்டும் சட்டங்கள் இல்லாத நிலையில் ஆன்லைன் பிட்காயின் தளங்கள் விருப்பம்போல இயங்குகின்றன. அதே நேரம் இந்திய ரிசர்வ் வங்கி அச்சமடைந்துள்ளது.
பிட் காயின் உள்ளிட்ட டிஜிட்டல் மின்னணு நாணயங்களால் ஏற்பட வாய்ப்புள்ள "பொருளாதார, நிதி, செயல்பாடு, சட்ட, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள்" குறித்து "பயனர்கள், மின்னணு நாணயங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு" இந்த வாரத்திலேயே மூன்றாவது முறையாக எச்சரிக்ககை விடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
>யாராவது காதுகொடுத்து கேட்கிறார்களா?

இந்தியாவில் பிட்காயின்களின் தேவை அதன் விநியோகத்தைவிட அதிகமாக உள்ளதால், அதன் சர்வதேச விலையை விட இந்தியாவில் 20 சதவீதம் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.
யூனோகோய்ன், ஸெப்பே, காயின்செக்கியூர், பிட்காயின் ஏ.டி.எம். போன்ற 11 பிட்காயின் வர்த்தக தளங்கள் தற்போது இந்தியாவிலுள்ளன. இதில் சுமார் 30,000 வாடிக்கையாளர்கள் எப்போதும் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஒரு எளிய கிளிக்கின் மூலம் எவரும் ஒரு புதிய கணக்கை தொடக்கி பிட்காயினை முழுதாகவோ அதன் ஒரு சிறு பகுதியையோ வாங்கி விற்று வர்த்தகத்தில் ஈடுபடமுடியும்.
பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின்களுக்கென இரண்டு முக்கிய பண்புகளுள்ளன: இது மின்னணு வடிவிலானது மற்றும் மாற்று பணமாக கருதப்படுகிறது. உங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் பணத்தாள் அல்லது சில்லரைகளை போன்றல்லாமல், இது பெரும்பாலும் இணையத்திலேயே இருக்கும்.
இரண்டாவதாக, பிட்காயின் என்பது அரசாங்கத்தாலோ அல்லது பாரம்பரிய வங்கிகளினாலோ அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதில்லை. எக்ஸ்பீடியா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் தங்களது சேவைகளில் பிட்காயின்களை மெய்நிகர் டோக்கன்களை போன்று ஏற்றுக்கொள்கின்றன.
இருந்தபோதிலும், பெரும்பான்மையான பயனர்கள் பிட்காயின்களை ஒரு நிதி முதலீடாக எண்ணி அவற்றை வாங்கி விற்கிறார்கள். >"கடந்த ஆண்டு இந்த நேரத்தில் 100,000 பதிவு செய்த வாடிக்கையாளர்களை கொண்டிருந்த எங்களிடம் தற்போது 850,000 வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். பிட்காயின்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எனது பகுப்பாய்வின்படி, பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரிய பணக்காரர்களாகவும், தங்களது வாழ்க்கையில் அபாயங்களை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் " என்று யூனோகாயின் நிறுவனத்தின் இணை நிறுவனர் சாத்விக் விஸ்வநாதன் பிபிசியிடம் கூறினார்.
பிட்காயின்களின் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அதை கொண்டு தங்களது ஆன்லைன் வணிகத் தளங்களில் பொருட்கள் வாங்கும் வசதியையும் சில இந்திய நிறுவனங்கள் வழங்குகின்றன. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் பிட்காயின்களை பணமாக மாற்றி அதன் மூலம் பொருட்களை வாங்கும் முறையை ஏற்கனவே வழங்கி வருகின்றன.
ஆனால், கடைசியில் பார்க்கும்போது பிட்காயின் என்பது மின்னணு குறியீட்டை கொண்ட ஒரு மென்பொருளேயாகும்.
வங்கியில் பணத்தை செலுத்துவதைவிட பிட்காயின் என்பது பாதுகாப்பானதாகுமா?
"பிட்காயின்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எந்தவொரு கட்டமைப்பும் இல்லை. எனவே, தற்போது பிட்காயின்களில் முதலீடு செய்துள்ளவர்கள் அதன் விவரங்களை பிரதியெடுத்து, லாக்கருக்குள் வைத்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றால், ஒரு உலகளாவிய பணப்பை பதிவேட்டை தொடங்கி, அதன் மூலம் யார் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதையும் பரிவர்த்தனைகள் எங்கிருந்து நடைபெற்று வருகின்றன என்பதையும் நாம் அறியும்படி செய்யலாம். ஒருவேளை எனது பிட்காயின் திருடப்பட்டால் இந்த பதிவேட்டின் மூலம் அதன் நிலைகுறித்த விடயங்களை அறியவியலும்" என்று டிரோலேப்ஸின் இணை நிறுவனரான விஷால் குப்தா பிபிசியிடம் கூறினார்.
வெறும் எச்சரிக்கை விடுப்பதற்கான நேரம் கடந்துவிட்டதா?
பிட்காயின்களின் பிரபலத்தோடு, ஈத்தரியம் மற்றும் லைட்காயின் போன்ற பிற மின்னணு பண வகைகளும் இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. எனவே, அரசாங்கம் தனது கொள்கையை தெளிவுபடுத்துவதற்கான நேரமா இது?"இந்தத் துறையில் புரட்சிகர மாற்றங்கள் மற்றும் அதிகளவிலான முன்னோக்கிய நகர்வுகளும் உள்ளன. தொழில்நுட்பம் என்பது எப்பொழுதுமே அரசாங்கத்திற்கு முன்னதாக முன்னேறி குறுக்கீடாகவும் மாறிவிடுகிறது. தொழில்நுட்பத்தோடு நாமும் முன்னேறி, அதற்கேற்ற மாற்றங்களைச் செய்வது அத்தியாவசியமானது. இப்பிரச்சனையானது, நிதி அமைச்சகம் தனக்குள் கலந்தாலோசிப்பதுடன், இது தொடர்பாக மற்ற அமைச்சகங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முன்னெடுக்க வேண்டிய ஒன்று" என்று இந்திய அரசின் முக்கிய அமைப்புகளுள் ஒன்றான நிதி ஆயோக்கின் தலைமை செயலதிகாரி அமிதாப் காந்த் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஏற்றத்துக்கும் ஒரு வீழ்ச்சி உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிட்காயின்களின் செயல்பாடு குறித்த ஒரு பார்வை, அது எந்த எச்சரிக்கையுமே இல்லாமல் ஒரே நாளில் 40% முதல் 50% வீழ்ச்சியடைந்த பல மோசமாக தருணங்களை கொண்டிருந்ததை காட்டுகிறது. ஏப்ரல் 2013 பிட்காயின்களின் மதிப்பு ஒரே இரவில் 233 டாலர்களிலிருந்து 67 டாலர்களுக்கு என 70 சதவிகிதம் குறைந்துவிட்டது. < பிட் காயினை அடிப்படையாக வைத்து 'ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ்' எனப்படும் நிதிச்சந்தை வர்த்தகம் நடத்த அமெரிக்காவின் சமீபத்திய பச்சை கொடியே, பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு உள்ள மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது. இந்த முடிவே சமீபத்திய பிட்காயின் மதிப்புயர்வுக்கு வழிகோலியது. ஆனால், அமெரிக்காவின் பெரும் வங்கிகள் பிட்காயினின் வளர்ச்சி குறித்த கவலைகளை வெளிப்படுத்தி வரும் சூழ்நிலையில், பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் போன்றோர் பிட்காயின் என்பது ஓர் "உண்மையான நீர் குமிழி" என்று கூறியதுடன் அதற்கு சிவப்பு கொடியையும் காட்டியுள்ளனர்.
ஹேக் செய்யப்பட்ட பல மில்லியன் பிட்காயின்கள்
"தொழிலில் தேர்ந்த" சில ஹாக்கர்கள் ஒரு முன்னணி பிட்காயின் சேவை நிறுவனத்திடமிருந்து கிட்டத்தட்ட 4,700 பிட்காயின்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
e>பிட்காயின்களின் மதிப்பு தற்போது தொடர்ந்து அதிகமாகி வரும் சூழ்நிலையில், இதை எழுதும்போது திருடப்பட்ட பிட்காயின்களின் மதிப்பு சுமார் 80 மில்லியன் டாலர்களாக இருந்தது.
ஸ்லோவேனியாவை சேர்ந்த பிட்காயின் பரிமாற்ற சேவை நிறுவனமான நைஸ்ஹாஸின் பிட்காயின்கள்தான் இந்த ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் திருடப்பட்டுள்ளது.
திருடுபோன தங்களது பயனர்களின் பிட்காயின்களை மீண்டும் பெறுவதற்கு தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறியுள்ள அந்நிறுவனம், "யாரோ ஒருவர் வேண்டுமென்றே எங்களை கீழிறக்க விரும்பியதாகவும்" தெரிவித்துள்ளது.
மின்னணு பணமென்பது ஒரு சரிவுக்கு முந்திய உச்சியில் உள்ளதா அல்லது இந்த வளர்ச்சி நிலையானதா என்ற கேள்வி எழுகிறது.
அதற்கான பதிலை காலம்தான் கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை: