வியாழன், 7 டிசம்பர், 2017

சிவசேனா : ராகுல் காந்தியை திறமையான தலைவராக குஜராத் தேர்தல் மாற்றியுள்ளது

ராகுல் காந்தியை திறமையான  தலைவராக குஜராத் தேர்தல் மாற்றியுள்ளது. : சிவசேனா
தினத்தந்தி :ராகுல் காந்தியை திறமையான தலைவராக குஜராத் தேர்தல் மாற்றியுள்ளது. என்று சிவசேனா தெரிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ராகுல் காந்தியை திறமையான  தலைவராக மாற்றியுள்ளது  என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. குஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக அரசு ஆட்சியை தக்கவைக்கவும் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள ராகுல் காந்தியும் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். குஜராத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் இந்துத்வா பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுலின் இந்த யுக்தி பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது- “ பா.ஜனதாவால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிற இந்த தேர்தல் (குஜராத்), ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது.
பிரதமர் மோடியை சோர்வடைய செய்துவிட்டது. ராகுல்காந்தி இனிமேல் ‘பப்பு’ இல்லை என்பதை தேர்தல்கள் நிரூபித்து காட்டிவிட்டன. பா.ஜனதா பெரிய மனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் காங்கிரசின் நிலைமை மோசமாக இருக்கிறது. பா.ஜனதா தனக்காக உருவாக்கி இருக்கும் அரசியல் மாயையை தகர்த்து, ராகுல்காந்தி அவருக்காக ஒரு பாதையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ராகுல்காந்தி கோவில்களுக்கு செல்வது இந்துத்வாவுக்கு கிடைத்த வெற்றி”  இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: