வியாழன், 11 ஜனவரி, 2018

மதுசூதனன் : அமைச்சர் ஜெயகுமார்தான் எனது தோல்விக்கு காரணம்

வெப்துனியா :ஆர்.கே.நகரில் தான் தோல்வி அடைந்ததற்கு அமைச்சர் ஜெயக்குமாரே காரணம் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தில் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வியையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பரபரப்பு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதம் சீக்ரெட் என மதுசூதனன் கூறினாலும் கடிதத்தில் அவர் கூறியுள்ளவை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அந்த கடிதத்தில் மதுசூதனன் 14 கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் எழுப்பியுள்ளார். அந்த கேள்விகளுக்கு முன்னதாக மிக நீளாமான கடிதம் ஒன்றையும் மதுசூதனன் எழுதியுள்ளார். அதில் “இரு அணிகளும் இணைய நான் முயற்சி எடுத்த போது அது நடக்கவிடாமல் தடுத்தவரும், ஆர்.கே.நகரில் நான் தோல்வி அடையவேண்டும் என வேலை பார்த்தவரும் உங்கள் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்தானே” என அவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, ஆர்.கே.நகர் வேட்பாளராக மதுசூதனனை நிறுத்தக்கூடாது என தொடக்கத்திலேயே அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அதிமுக நிர்வாகிகளை களப்பணி செய்ய விடாமல் தடுத்தார் எனவும் மதுசூதனன் தரப்பு கருதுகிறது. எனவேதான், தனது தோல்விக்கு ஜெயக்குமாரே காரணம் என மதுசூதனன் குற்றம் சாட்டுவதாக தெரிகிறது. அதோடு, தோல்வி குறித்து ஏன் ஆய்வு நடத்தவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேட்டுள்ளார். தன்னுடைய கேள்விகளுக்கு திருப்தியளிக்க கூடிய வகையில் பதில் தரவில்லை என்றால், கட்சியில் தான் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என மிரட்டும் தொனியில் எழுதியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: