புதன், 10 ஜனவரி, 2018

RK Nagar தினகரன் வெற்றி பெற்றால் இந்த ஆட்சிக்கு வேட்டு வந்துவிடும் என்று மக்கள்? ஸ்டாலின் இளைஞரணி,,,,

tamilthehindu :ஆர்.கே.நகரில் திமுகவின் கணக்கு எப்படி தவறானது, ஏன் தோற்றோம் என திமுக இளைஞரணி கூட்டத்தில் மனம் திறந்து மு.க.ஸ்டாலின் பேசினார்.
செவ்வாய்க்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
''அண்மையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கினோம். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்திருக்கிறது, அவர்களுடைய வாக்குகள் இரண்டாகப் பிரியும். திமுக அந்தத் தொகுதியில் இரண்டொருமுறை வெற்றிகளையும், பலமுறை தோல்விகளையும் கண்டிருக்கிறது என்று கணக்கிட்டு பணியாற்றினோம்.
வெற்றி பெற்ற நேரத்திலும், தோல்வியுற்றபோதும் திமுக பெற்றிருந்த வாக்குகளை இப்போது பெற்றால் நாம் வெற்றியடைவோம் என்று எண்ணியிருந்தோம். போதாக்குறைக்கு நம்முடன் ஒரு மெகா கூட்டணியும் இருந்தது. அவர்களின் வாக்குகளை எவ்வுளவுதான் குறைத்தாலும், குறைந்தது எல்லா கட்சிகளும் சேர்ந்து 5000 வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கிட்டோம்.

காரணம், இடதுசாரிகள் தனியாக நின்றபோதே 9000 வாக்குகள் பெற்றுள்ளார்கள். அவர்கள் எல்லாம் நம்முடைய கூட்டணியில் இருக்கிறார்கள் என்று கணக்கிட்டோம். அதிமுக இரட்டை இலை சின்னத்திலும், திமுக உதயசூரியன் சின்னத்திலும் நிற்கின்றன, திமுகவுக்கு என உள்ள ஓட்டுகளை நாம் வாங்கி விடுவோம், ஆளுங்கட்சியான அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது, சுயேச்சையாக போட்டியிடும் தினகரன் குறைந்தபட்சம் 20,000 ஓட்டுகள் வாங்கினாலும், நாம் எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என்று கணக்கிட்டோம்.
ஆனால், என்ன நடந்தது? நமக்கும் அதிமுகவின் இரட்டை இலைக்கும் போட்டியில்லை. தினகரனுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்ற சூழல் வந்துவிட்டது. அவர்கள் 6,000 ரூபாய் கொடுத்தார்கள். இவர் ஏற்கெனவே 4,000 கொடுத்து, மேற்கொண்டு 6,000 கொடுப்பதாக டோக்கன்களை கொடுத்து, ஹவாலா அடிப்படையில் பணம் வழங்குவதாக சொல்லி, அவர்கள் இறங்கினார்கள்.
இதையெல்லாம் கடந்து, திமுக வெற்றி பெற்றால், ஏற்கனவே 89 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், 90 பேர் ஆகியிருப்போம். ஆட்சிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், தினகரன் வெற்றி பெற்றால் இந்த ஆட்சிக்கு வேட்டு வந்துவிடும் என்றும் ஒரு கணக்கு வந்தது. இதுதான் உண்மை. அந்த தொகுதியில் கட்சியில் இருக்கும் சங்கடங்கள், அமைப்புரீதியான பிரச்னைகள் பல உண்டு. அதுகுறித்தெல்லாம் ஆய்வு நடத்தி கண்டறிந்திருக்கிறோம், விரைவில் அவை சரி செய்யப்படும்.
ஆனால், முதல் பூத்திலிருந்து கடைசி பூத் வரை ஒரே சீராக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. ஒரு இடத்திலாவது குறைந்து, ஏறி இருக்கிறதா என்றால் கிடையாது. எங்காவது வித்தியாசம் உள்ளதா என்று கணக்கிட்டால், அதுவும் கிடையாது. முதல் பூத்திலிருந்து கடைசி பூத் வரை நாம் மட்டுமல்ல, இரட்டை இலையும், அதேபோல தினகரனுக்கும் வாக்கு விழுந்துள்ளது. எனவே, மக்கள் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று முடிவெடுத்து, நமக்கு போட வேண்டிய ஓட்டுகளையும் தினகரனுக்குப் போட்டு விட்டார்கள்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இந்தத் தேர்தலில் தோற்றது மட்டுமல்ல, டெபாசிட்டையும் நாம் இழந்திருக்கிறோம். ஏற்கெனவே அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பென்னாகரம் தொகுதியில் டெபாசிட்டை இழந்தது. ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதேபோல, 2016-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதியில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக டெபாசிட் இழந்தது.
எனவே, ஆர்.கே.நகர் தொகுதியை மற்ற தொகுதிகளுடன் சேர்க்கவே முடியாது. அதுவொரு வித்தியாசமான தொகுதி. தோற்றதற்காக இதையெல்லாம் சொல்லி உங்களை சமாதானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எது எப்படியிருந்தாலும் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இருக்கின்ற அணிகளில் நமது இளைஞரணி சிறப்புக்குரிய அணியாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.
என்னைப் பொருத்தவரையில் திமுகவின் செயல் தலைவராக ஒரு புகுந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை சோதனைகளுக்குப் பிறகு, கட்சிகளின் மூத்த முன்னோடிகள் அடங்கிய உயர்நிலை செயல்திட்டக்குழுவை கூட்டி, இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், அதனால் மற்ற இடங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றியெல்லாம் விவாதித்தோம்.
அடுத்ததாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இன்னும் விரிவாக விவாதித்தோம். அதன் பிறகு திமுகவின் துணை அமைப்புகளில் முதன்முதலில் நான் பங்கேற்றுள்ள கூட்டம் இளைஞரணியின் இந்தக் கூட்டம்தான். இப்படிப்பட்ட நிலையில், நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, தீர்மானங்களைப் போட்ட கடமையை மட்டும் நிறைவேற்றினால் போதாது. நம்முடைய பணிகளில் உறுதியுடன் ஈடுபட வேண்டும்.''
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருத்துகள் இல்லை: