ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நீதிமன்றம் செல்வதற்குள் ஜெயா படத்திறப்பு!

நீதிமன்றம் செல்வதற்குள் படத்திறப்பு!மின்னம்பலம் :நாளை தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு எதிர்கட்சிகளும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், இன்று (பிப்ரவரி 11) சட்டப்பேரவை செயலாளர் பூபதியிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பொது இடங்களிலும், அரசு விழாக்களிலும் பயன்படுத்துவதை தவிர்க்க நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த படத்திறப்பிற்கான அழைப்பிதழைக் கூட எதிர்க்கட்சிக்கு வழங்காமல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது ஏற்புடையது அல்ல" என்று ஜெ.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவது குறித்த வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அதற்கு முன்பாக காலை 9:30 மணிக்கே சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் ஜெ.அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்புக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர்: சட்டப்பேரவை விதிமுறைகளுக்குட்பட்டு பேரவையை அமைதியாக நடத்துவது மட்டுமே பேரவைத் தலைவரின் கடமை. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் அவர் திறந்து வைப்பது, சட்டவிதிகளுக்கு முரணானது. எனவே, இதுவொரு கருப்பு நடவடிக்கை என திமுக சார்பில் நான் கண்டிக்கிறேன்.
அன்புமணி ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர்: உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்திய குற்றவாளி படத்தை சட்டமன்றத்தில் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா, மேலும் ஜெயலலிதா மணிமண்டபத்துக்கு 40 கோடி செலவு செய்ய இருக்கிறார்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.தேவைப்பட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.
விஜயகாந்த் தேமுதிக தலைவர் : ஜெயலலிதா A1 குற்றவாளி, என்பதால் அவருடைய படத்தை சட்டமன்றத்தில் திறக்க கூடாது.
ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்: இந்திய வரலாற்றில் முதல்வராக இருக்கும்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் இயற்கையெய்திய காரணத்தினால், சிறைத்தண்டனை வழங்கப்படவில்லை. இவ்வாறு ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு சட்டப்பேரவை வளாகத்தில் படம் திறப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, இந்நடவடிக்கையை கைவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை: