ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

சந்தையூர் ... தீண்டாமை சுவர் என்று அருந்ததியினர் போராட்டம் .... ஊடகங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

AThi Asuran :சந்தையூரில் உள்ளது சுற்றுச்சுவர் அல்ல. தீண்டாமைச் சுவரே தான் அது இடிக்கப்பட்டே ஆக வேண்டும்! அது வெறும் இடப்பிரச்சனை என்று சிலர் திசைதிருப்புகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் சக்கிலியர்கள் அனுமதிக்கப்படுவதேயில்லை. சுவரை இடிப்பதோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 50 செண்ட் இடம் பட்டியலின ஜாதிகள் அனைவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்.
சுவர்த் தீண்டாமை மட்டுமல்ல. தீண்டாமையின் பல வடிவங்கள் அங்கே நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, அருந்ததியப் பெண் சமைக்கும் அங்கன்வாடியில் பறையர்கள் உணவு உண்பதில்லை. மாட்டுக்கறி சாப்பிடும் அருந்ததிய ஜாதிப் பெண் சமைப்பதால்,
பறையர்களுக்குத் தீட்டாகி விடுமாம்.

பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் இந்து மதக் காட்டுமிராண்டித் தனங்களைப் பறையர்களும் அப்படியே பின்பற்றுவது பார்ப்பன ஆதிக்கத்தை மேலும் மேலும் வலுப்படுத்தவே பயன்படும். பட்டியலின ஜாதிகளுக்குள் நிலவும் தீண்டாமைகளை ஒழிப்போம். பட்டியலின ஜாதிகள் மீது பிற்படுத்தப்பட்டோர் நடத்தும் தீண்டாமைகளையும் ஒழிப்போம். பார்ப்பன ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடுவோம்.

இன்று சந்தையூரை விட்டு வெளியேறி மலையடிவாரத்தில் குடியேறிப் போராடிக்கொண்டிருக்கும் அருந்ததிய மக்களை நேரில் சந்தித்தோம். இரவில் கடுமையான பனி, பகலில் கொடும் வெயில், காட்டுவிலங்குகள், விஷ வண்டுகள் இவற்றோடு குழந்தை குட்டிகளுடன் கொடும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஊடகங்களில் உள்ள சமூக அக்கறை உள்ளவர்கள் இதை ஏன் செய்தியாக்கவில்லை?

கருத்துகள் இல்லை: