வெள்ளி, 16 மார்ச், 2018

தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்தார்.

விவசாயத்துக்கான தமிழக பட்ஜெட்! மின்னம்பலம் : 2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதித் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறைக்கு ரூ.8916 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடியும், 400 புதிய மானாவாரி தொகுப்புகளை ஏற்படுத்த ரூ.321 கோடியும், புதிய வேளாண் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்த ரூ.100 கோடியும், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்துக்கு ரூ.50 கோடியும், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.632 கோடியும், வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடியும், கூட்டுறவு விற்பனைக் கூடங்களுக்கு ரூ.159 கோடியும், நுண்ணீர்ப் பாசன மேம்பாட்டுக்கு ரூ.715 கோடியும், பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.100 கோடியும், சென்னை கிண்டியில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்க ரூ.20 கோடியும் இன்னும் பல்வேறு திட்டங்களுக்கென மொத்தம் ரூ.8,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதோடு பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லைப் போலவே துவரை, பச்சைப் பயிறு உள்ளிட்ட பயிறு வகைகளையும் தமிழக அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்று அறிவித்துள்ளது. ’உழவன்’ என்ற செல்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் எனவும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் ஆலையும், தேவாளையில் மலர் பதப்படுத்தும் ஆலையும் அமைக்கப்படும் எனவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: