ஞாயிறு, 11 மார்ச், 2018

இமயமலையில் ரஜினி பாஜக முன்னாள் முதல்வர்களை சந்திப்பு

ரஜினிகாந்த்-பாஜக முன்னாள் முதல்வர் சந்திப்பு!மின்னம்பலம் :ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தை கன்ட்படி கிராமத்தில் பாபா ஆசிரமத்தில் இமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் சந்தித்துப் பேசினார்.
அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் , சாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியலே தன்னுடைய கொள்கை என்றும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கட்சியின் கட்டமைப்பு பணிகளும், உறுப்பினர் சேர்ப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே இமயமலைக்கு செல்ல நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லா வழியாக தர்மசாலா போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து பாலம்பூர் மாவட்டம் சென்ற ரஜினிகாந்த் கன்ட்படி கிராமத்தில் உள்ள மகாவதார் பாபா ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்து வருகிறார். அங்கு அவர் 10 நாளுக்கு மேல் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. தியானத்தில் ஈடுபட்ட ரஜினிகாந்த் திபெத்தியர்கள் அணியும் தொப்பியையும் அணிந்திருந்தார்.
தியான மண்டபத்தில் ரஜினிகாந்தை இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிரேம் குமார் துமால் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெரிய நடிகரான ரஜினிகாந்துடன் சில மதிப்புமிக்க நேரங்களை செலவழித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவரை விருந்தினராக ஏற்பதில் ஹிமாச்சல பிரதேச மக்கள் மகிழ்கிறார்கள். ஹிமாச்சல பிரதேசத்தில் உங்கள் தருணங்கள் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். சந்திப்பில் ஆசிரம நிர்வாகி பாபா அமர்ஜோதியும் உடனிருந்தார்.
முன்னதாக பலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "ஆன்மீக பயணமாக இமயமலைக்கு வந்துள்ளதால் அரசியல் பேச மாட்டேன். இது புனிதமான இடம். இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. வழக்கமான பணியிலிருந்து மாறுதலை உணா்கிறேன். சுற்றுப்பயணம் நன்றாக, அமைதியாக, தெய்வீகமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: