வெள்ளி, 16 மார்ச், 2018

மத்திய அரசுக்கு எதிரான YSR - TDP நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ள மறுப்பு ... செவ்வாய் கிழமை மீண்டும் ....

tamilthehindu :தெலுங்குதேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சிகளின் முயற்சியால்
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை அசைத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
ஏனென்றால், அந்த அளவுக்கு தனியாக அசுர பலத்துடனும், கூட்டணியுடன் கணக்கிடும்போது, மூன்றில் 2 பங்குக்குஅதிகமாக எம்.பி.க்கள் பாஜக அரசுக்கு இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அது வீணாகத்தான் போகும்.
கடந்த 4 ஆண்டுகள் ஆண்ட பாஜக தலைமைக்கு எதிராக ஒரே முறை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததாக வரலாறு இருக்குமே தவிர அந்த தீர்மானத்தால்,மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எந்தவிதமான நெருக்கடியும் ஆட்சியில் ஏற்படுத்தப் போவதில்லை.
ஒருங்கிணைந்த ஆந்திரமாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவுக்கு சிறப்பு நிதித்தொகுப்பு, சிறப்பு அந்தஸ்து தருவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
அதே கடந்த 4 ஆண்டுகளாக நிதித்தொகுப்பு அளிக்கப்படாததைக் கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதற்கிடையே கடுமையான நிலைப்பாட்டை எடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தார்.

மேலும், ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ், இன்னும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான கடிதத்தையும் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. தோட்டா நரசிம்மன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி நரசிம்மன் ஆகியோர் இன்று அளித்துள்ளனர்.
இந்த பரபரப்புக்கு இடையே இன்று மக்களவை கூடியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக கட்சி எம்.பி.க்களும், தெலுங்கானாவுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு கேட்டு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், வங்கி மோசடி தொடர்வாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து அதிமுக, காங்கிரஸ், டிஆர்எஸ், உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில் ‘அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனது கடமை இதை கொண்டுவந்துவிட்டேன். அனைத்து உறுப்பினர்களும் அவர்களின் இருக்கையில் அமர் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
ஆனால், தொடர்ந்து எம்.பி.க்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பேசிய சுமித்ரா மகாஜன், நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸை இப்போது ஏற்க முடியாது, தொடர்ந்து கூச்சலிட்டு வருவதால், அவையை நாள்முழுவதும் ஒத்திவைக்கிறேன் என்று அறிவித்தார்.
இதற்கிடையே கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தபோது, எம்.பி.க்கள் இடையூறு செய்ததால், அவர் கடுமையாக கோபித்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தின அனைத்து அலுவல்களும் அடுத்தவாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
அசைக்க முடியுமா?
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு தற்போது மக்களவையில் 274 எம்.பி.க்கள் ஆதர இருக்கிறது. மக்களவையில் அசுரபலத்துடன் இருக்கிறது பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் 41 பேரையும் சேர்க்கும் போது, தனிப்பெரும்பான்மைக்கு அதிகமாகவே இருக்கிறது.
ஒருவேளை அடுத்தவாரம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அதில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்குமா, அல்லது எதிராக வாக்களிக்குமா அல்லது நடுநிலை வகிக்குமா என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அந்த கட்சிக்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர்.
மேலும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பிக்கள், அகாலி தளம் 4 எம்.பி.க்கள், ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி 3 எம்.பி.க்கள், ஐக்கிய ஜனதா தளம் 2 எம்.பி.க்கள், ஏஐஎனஆர்சி, ஜேகேபிடிபி, என்பிபி, பிஎம்கே, எஸ்டிஎப், ஸ்வபிமானி பக்சா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி. உள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கும் வகிக்கும் கட்சிகளாகும்.
இதற்கிடையே அதிகமுக கட்சிக்கு மக்களவையில் 37 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா?, அல்லது எதிராக வாக்களிப்பார்களா? என்பதையும் தெளிவு படுத்தவி்ல்லை.
தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்.பி.க்களும் என மொத்தம் 25 எம்.பி.க்கள் மட்டுமே இந்த தீர்மானத்தை கொண்டுவந்து இருக்கிறார்கள். இந்த கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் 50 எம்.பி.க்கள் ஆதரவு அளித்து தீர்மானம் கொண்டுவந்தாலும், அது மோடி அரசை எந்தவிதத்திலும் பாதிக்காது.
இதற்கிடையே தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவும், ஜகன்மோகன் ரெட்டியும் சேர்ந்து நடத்தும் அரசியல் கேலிக்கூத்து என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் ராவின் முடிவும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதனால், அடுத்த வாரத்தில் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தாலும், அது காற்று இல்லாத பலூன்போலவே அமையும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

I am an ex-government officer and have known about TDP since its inception. TDP is one of the most corrupt parties with the sole objective of being money-making. Their atrocities on the poor stir my heart and hence should be objected to in the court. Please share the word.