வியாழன், 17 மே, 2018

காங்கரஸ் ம ஜ தளம் தொடர் போராட்டம் 117 எம் எல் ஏக்களும் களத்தில்

மின்னம்பல்ம்: கர்நாடக முதல்வராக இன்று காலை எடியூரப்பா பதவி ஏற்ற நிலையில், இதனைக் கண்டித்து காங்கிரஸ், மஜத கட்சியினர் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பா நேற்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மாலையில் மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ், மஜதவின் 117 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ்-மஜத தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக நேற்றிரவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் எடியூரப்பாவின் பதவியேற்புக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பதவியேற்றார் எடியூரப்பா
பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று (மே 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார் . அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து எடியூரப்பா முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். விழாவில் அமைச்சர்களாக யாரும் பதவி ஏற்கவில்லை. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை.சரியாக காலை 9-9.05மணிக்குள் பதவியேற்பு நிகழ்வு முடிந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்திற்கு வந்த எடியூரப்பா தனது பணிகளைத் தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நான் முதல்வராகப் பதவியேற்றுள்ளேன். நான் முதல்வர் ஆவதற்குத்தான் கர்நாடக மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளேன். விரைவில் விவசாயக் கடன் ரத்துக்கான ஆணை வெளியிடப்படும்" என்று குறிப்பிட்டார். "அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ், மஜத கட்சிகள் நாடகமாடுகின்றன. நான் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வேன்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த கேள்விக்கு, நாளை அல்லது நாளை மறுநாள் வரை பொறுத்திருங்கள் என்று பதில் தெரிவித்தார்.
எடியூரப்பா தற்போது மூன்றாவது முறையாகக் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு சில நாட்கள் முதல்வராக இருந்த அவர், 2008ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் போராட்டங்கள்
எடியூரப்பா பதவியேற்ற நிலையில், ஈகிள்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் சவுதானுக்கு வருகை தனது அங்குள்ள காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சரியாக 10.30 மணியளவில் அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, குமாரசாமி ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டுவருகின்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, "பதவியேற்புக்குத் தடை கேட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனை நாங்கள் மக்கள் மன்றத்துக்குக் கொண்டுசெல்வோம். பாஜக எவ்வாறு அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி டி.கே. சுரேஷ் கூறுகையில், "ஆனந்த் சிங்கைத் தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன்தான் உள்ளனர். ஆனந்த் சிங் தற்போது மோடியின் பிடியில் உள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் 12.15 அளவில் நிறைவடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏக்கள் கலைந்து பேருந்துகள், கார்களில் ஈகிள்டன் விடுதியை நோக்கிப் புறப்பட்டனர்.
எடியூரப்பா பதவியேற்பைக் கண்டித்து பெங்களூரு தொடங்கி கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ், மஜதவினர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் காவல் துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. நீதி கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: