சனி, 19 மே, 2018

குமாரசாமி ..21- ஆம் தேதி பதவியேற்க ஆளுநர் அழைப்பார் என்று தெரிகிறது

tamiloneindia :பெங்களூர்: குமாரசாமியை ஆட்சி அமைக்க கர்நாடகா ஆளுவர் வஜுபாய் வாலா. அழைப்பு விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குமாரசாமி வரும் 21-ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கர்நாடகத்தில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜகவினர் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டால் பாஜகவுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனமும், அவப்பெயரும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை கூடியது.
அப்போது எடியூரப்பா தனது உருக்கமான உரையை ஆற்றினார். இந்த சபை கூடுவதற்கு முன்னரே எடியூரப்பாவை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.
அதனால் அவரது பேச்சு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது. பேச்சின் இறுதியில் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு சட்டசபையை விட்டு புறப்பட்டார்.
இந்நிலையில் அடுத்தப்படியாக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணியால் தேர்வு செய்யப்பட்ட குமாரசாமியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார். அனேகமாக குமாரசாமி வரும் 21-ஆம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை: