வியாழன், 17 மே, 2018

ராகுல் : பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்:

தினத்தந்தி :நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. அதேவேளையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதாக கூறி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கோரியது.
சட்ட ஆலோசனைகளை நடடத்திய ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ்  முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை  எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 


 உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து, எடியூரப்பா எந்த வித சிக்கலும் இன்றி முதல் அமைச்சராக பதவியேற்க வழி கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி  டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். பாஜக, வெற்றியை கொண்டாடும் வேளையில், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் கொள்ளும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: