வெள்ளி, 18 மே, 2018

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்ட மாபா பாண்டியராஜன் மேடைக்கு ஸ்டாலினும் .. ? அமெரிக்க தமிழர் சாதிக்கூட்டமைப்பே "பெட்னா"...?

மாபா பாண்டியராஜன் கௌரவிக்கப்படும் அதே பெட்னா விழாவில், ஸ்டாலின் கலந்து கொண்டால் முழம் ஏறி சாண் சறுக்கும் அவரின் அரசியல் வாழ்வில் மற்றொரு சின்ன சறுக்கலாக இருக்கும். அதற்காக நாங்கள் ஸ்டாலினை ஒதுக்கப்போவதில்லை. ஸ்டாலினை போகாதீர்கள் என்றும் சொல்ல முடியாது. ஏழு கடல் ஏழு மலை தாண்டி நான் போய் சொன்னாலும் கேட்பாரா என்று தெரியவில்லை?. ஸ்டாலின் ஒருவேளை உங்கள் விழாவிற்கு வந்தால் அந்த புகைப்படங்களை வைத்து சமூகநீதி எதிராளிகளுடன் ஸ்டாலின் கூட்டு என்று மே 17 இயக்கத்தவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்காரர்களும் நாம் தமிழர்களும் பரப்புவார்கள். அதற்கு இன்று பெட்னாவிற்கு எதிராக சண்டை போடும் திமுக காரர்கள் / திராவிட அனுதாபிகளே முட்டுக்கொடுத்தாக வேண்டும்.
Selvakumar Ramachandran : அன்புடன் - அமெரிக்கத் தமிழர் பேரவை பெட்னா-
இயக்குநர் நாஞ்சில் பீட்டர் அவர்களுக்கு,
வணக்கம். திராவிடக்கூத்தாடினாலும் காசு, காரியத்தில் கவனமில்லாமல் இருந்தால், நான் வளர உதவிய சமூகநீதிக்கு மரியாதை ஆகாதே, அதனால் பகல் முழுவதும் உழைப்பிற்கு கொடுத்த நேரத்தினால் உங்களுக்கு பதில் கொடுக்க தாமதமாகிவிட்டது. உங்கள் கமெண்டுகளை அதிகாலையில் என் பதிவில் கண்டேன். கிளிமூக்கு அரக்கன் லிமிடட் நடத்தும் பக்கத்தில் நீங்கள் போட்டிருந்த கமெண்டுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் அறியப்பெற்றேன். என்னுடன் பேச, நீங்கள் கொடுத்திருந்த எண்ணையும் கண்டேன். நீங்கள் என்னுடன் பேச விருப்பப்படுவதற்கு நன்றி. ஆனால் எனக்கு பேச விருப்பமில்லை. அதனால் என் தொலைப்பேசி எண்ணை கொடுக்க இயலாது. காரணங்களை தொடர்ந்து படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
என்னை சார்ந்த சான்றோர் அரக்கர்களுக்கு நான் சொல்லிக்கொடுக்கும் வாழ்வியல் முன்னுரிமை இதுதான்.
1. சமூகநீதி - குறிப்பாக கல்விக்கான சமூக நீதி

2. அறிவியல் மருத்துவம்
3. பொருளாதார தன்னிறைவு.
4. தமிழ்
5. திராவிட தேசியம் (எளியோர்களுக்குப் புரியும் வகையில் சொன்னால் ஈழத்தை ஒரு மாநிலமாக உள்ளடக்கிய ஸ்கேண்டிநேவிய பாணியிலான அகண்ட தமிழ்நாடு )
விலகும் புள்ளிகளில் விலகி சேரும் புள்ளிகளில் சேரலாம் என்று நான் அடிக்கடி சொன்னாலும் வேரில் வெந்நீர் ஊற்றும் புள்ளிகளை விரட்டி விரட்டி அழிக்க வேண்டும் என்பதும் என் கொள்கை. மேலே சொன்ன ஐம்பெருங்கொள்கைகளில் கடைசி மூன்றிற்கு எதிராக பேசுபவர்களை கண்டும் காணாமல் கூட போய்விடலாம். முதலிரண்டிற்கு துரோகம் செய்ய நினைப்பவர்களை முதன்மை எதிரிகளாக கருதவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை.
தமிழ்நாட்டின் முதுகெலும்பு - கல்வி; பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்று இருந்தகாலம் தொட்டு கல்வியே கண்கள். கல்வி எங்கள் பிறப்புரிமை என்ற திராவிட ஆட்சிக்காலங்களில், படிப்பு எங்களுக்கு உயிர். இதை எங்களுக்கு காலங்காலமாய் கொடுத்துக் கொண்டிருப்பது சமூகநீதி. அந்த சமூகநீதிக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்தவரை, அந்த சதிக்குக் காரணமான அரசாங்கத்துடன் நீங்கள் கொஞ்சிக் குலாவுவது உண்மையில் தமிழ்நாட்டு சனங்களைப் பார்த்து கேலி செய்வதாகும். தமிழக அரசு வரிப்பணத்தை எங்கள் அனுமதி இல்லாமல் ஏற்கனவே பணக்காரர்களால் நடத்தப்படும் அமைப்பின் தற்பெருமைக்காக, ஏற்கனவே பணக்கார கூட்டத்தினால் நடத்தப்படும் பல்கலைகழகத்தில் பத்தோடு பதினொன்றாக இருக்க உதவினார் என்பதற்காக எங்கள் இளந்தலைமுறையினர் எதிர்காலத்தை அடகு வைக்கவேண்டுமா? லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் உங்களின் வறட்டு கௌரவத்திற்காக தமிழ்நாட்டு மக்கள் ஏன் காசு கொடுக்கவேண்டும்?
எங்கள் பிள்ளைகள் படிக்க முடியாமல் போய் ஆடும் மாடும் மேய்க்க போகும் பொழுது அமெரிக்கத்தமிழர் வளர்த்த தமிழ் இருந்தால் அழிந்தொழிந்தால் என்ன?
திருக்குறள் மாநாடு நடத்தினோம், புறநானூறு மாநாடு நடத்தினோம் என்கிறீர்கள்? யாருக்கு என்ன பிரயோசனம்?
தமிழ்நாட்டில் இருந்து எத்தனை கல்லூரி மாணவர்களை அமெரிக்கா அழைத்து படிக்க வைத்திருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் இருந்து எத்தனை இளம் தொழில் முனைவோர்களுக்காக முதலீடு செய்திருக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் இருந்து எந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களையாவது தூக்கிவிட்டிருக்கிறீர்களா?
தமிழ்நாட்டில் உங்கள் காசைக் கொண்டு எந்த கல்லூரியிலாவது தொழில் முனைவோருக்கான இன்குபேட்டர்கள் அமைத்திருக்கிறீர்களா?
படிப்பு / பொருளாதார தன்னிறைவுகளுக்கு எதையும் நகர்த்தாமல் திருக்குறளில் மருத்துவத்தைத் தேடி என்ன பயன்?
தமிழ்நாட்டு ஸ்கூல்களின் கக்கூஸ்களுக்கு பெயிண்ட் அடித்தோம், பழைய லேப்டாப்புகளை பால்வாடிகளுக்குக் கொடுத்தோம் என்று தயவு செய்து சொல்லிவிடாதீர்கள்.
தமிழ் எழுத்துலகிற்கோ தமிழ் அரசியல் உலகிற்கோ சம்பந்தமே இல்லாத ஒருவர் என் பதிவுகளைப் பார்த்துவிட்டு, "பெட்னாவுடன் எதுக்கு சண்டை போடுற, அவனுங்க எல்லாம் சாதி வெறியனுங்க" என்கிறார்.
" படிக்காத சாதிவெறியனையாவது திருத்தலாம், படிச்ச சாதிவெறியர்களை திருத்துறது, கொக்கு தலைல வெண்ணெய் வக்கிற கதைதான் ஒன்னுமே நடக்காது" என்கிறார் மற்றொருவர்.
இந்த நல்ல பெயரெல்லாம் பெட்னாவிற்கு எப்படி கிடைத்தது. கடல் கடந்த சாதிக் கூட்டங்களின் கூட்டமைப்பே பெட்னா என்ற பேர் எவ்வளவு அழித்தாலும் போகாது என்ற அளவிற்கு ஏன் நிலைபெற்றது என்று யோசித்திருக்கிறீர்களா?
உங்களில் பலபேர் சமூகநீதியில் படித்துத்தானே மேலே சென்றீர்கள். எப்படி சார் அக்கரைக்குப் போனவுடன் எங்கள் பக்கம் இருக்கும் பாலங்களை படகுகளை எரிக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. வெறும் பத்துகோடிக்கு எங்கள் வீட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை விற்றுவிட்டீர்களே?
என்னை திட்டுவதை நிறுத்திவிட்டு பெட்னாவில் இருக்கும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும்.
காட்டாட்சியில் தமிழக மக்கள் வெம்பித் தவித்துக்கொண்டிருக்கையில், அதற்கு காரணமான அரசுடன் நீங்கள் ஒப்பந்தம் போடுகிறீர்கள். மக்கள் இருந்தால்தானே மொழி!! உங்கள் பெட்னா தமிழர்களில் பலர், ஈழப்போரின் வடு ஆறும் முன்னர் செம்மொழி மாநாடா என்று கதறீனீர்கள். கதறியவர்களில் பலர் சயனைடு குடித்து இறந்துவிடுவார்களோ என்று நான் பயந்த அளவிற்கு புலம்பி சாபம் விட்டார்கள். சபித்த பலர், மார்க்கண்டேயனாகி இன்று பாண்டியராஜனை அழைப்பதில் என்ன தவறு என கேட்கிறார்கள்.
பாண்டியாராஜனையும் அழைக்கிறோம். ஸ்டாலினையும் அழைக்கிறோம். தானிக்கும் தீனிக்கும் சரியாகிவிட்டது என சிறுபிள்ளையாட்டம் ஆடுகிறீர்கள். அனிதாவின் பிணத்திற்கு போட்ட மாலையை ஸ்டாலினுக்கும் நீங்கள் போட நினைத்தால் ஸ்டாலினுக்குத்தான் அது அவமானம். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டவர்களை அவமானப்படுத்துவது. கலைஞர் என்ற வைரம் இருந்த இடத்தில் ஸ்டாலினை தங்கமாக பார்க்கும் திராவிட அபிமானிகளை அசிங்கப்படுத்துவதைப்போல ஆகும்.
மபாய் பாண்டியராஜன் கௌரவிக்கப்படும் அதே பெட்னா விழாவில், ஸ்டாலின் கலந்து கொண்டால் முழம் ஏறி சாண் சறுக்கும் அவரின் அரசியல் வாழ்வில் மற்றொரு சின்ன சறுக்கலாக இருக்கும். அதற்காக நாங்கள் ஸ்டாலினை ஒதுக்கப்போவதில்லை. ஸ்டாலினை போகாதீர்கள் என்றும் சொல்ல முடியாது. ஏழு கடல் ஏழு மலை தாண்டி நான் போய் சொன்னாலும் கேட்பாரா என்று தெரியவில்லை?. ஸ்டாலின் ஒருவேளை உங்கள் விழாவிற்கு வந்தால் அந்த புகைப்படங்களை வைத்து சமூகநீதி எதிராளிகளுடன் ஸ்டாலின் கூட்டு என்று மே 17 இயக்கத்தவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்காரர்களும் நாம் தமிழர்களும் பரப்புவார்கள். அதற்கு இன்று பெட்னாவிற்கு எதிராக சண்டை போடும் திமுக காரர்கள் / திராவிட அனுதாபிகளே முட்டுக்கொடுத்தாக வேண்டும்.
ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் நான் இருந்தால், அமெரிக்கா பெட்னா போகாதீர்கள். பெட்னா தமிழர்களுக்குப் பிடித்த ஈழத்தாய் ஜெயலலிதா ஸ்டைலில் வீடியோ கான்பரன்சிங்கில் அனிதாவின் ஊரில் இருந்து பேசி வாழ்த்திவிடுங்கள் என்று அரக்க டிப்ஸ் கொடுப்பேன்.( திமுக மேலிட அரக்கர்கள் இதை காப்பி அடித்து ஸ்டாலினின் காதில் போடலாம். )
கடைசியாக எத்தனை சமாதானம் சொன்னாலும் என்னை வித விதமாக உங்கள் ஆட்கள் ஊர் ஊராக போன் போட்டு திட்டினாலும் உங்களுடனோ இல்லை உங்கள் பெட்னா ஆட்களுடனோ பேச எனக்கு துளியும் விருப்பம் கிடையாது. உங்களுடன் பேசினால் அனிதாவின் ஆன்மாவும் எர்ணாகுளத்தில் இறந்து போனவரின் ஆன்மாவும் நாம் பெற்ற சமூகநீதித் தொலைந்து எதிர்காலத்தில் அழிந்துப் போகப்போகும் எங்கள் இளந்தளிர்களின் ஆன்மாக்களும் எங்களை மன்னிக்கவே மன்னிக்காது.
நீங்கள் / உங்கள் என்று சொல்வதில் நாஞ்சில் பீட்டர் என்ற தனிப்பட்ட நபர் கிடையாது. பெட்னா என்ற சாதிக் கசட்டு மூளைகளின் கூட்டு என்று எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்தவுடன், கொடுக்கப்போகும் கிளிமூக்கு அரக்கன் விருதுகளுக்கு நான் விரும்பி கொடுக்கப்போகும் பெயர்களில் உங்கள் பெயர் முதன்மையானதாக இருக்கும். அந்த விழாவில் சந்திப்போம் பேசுவோம். பெரியாரின் சமூகநீதியின் பால் உங்களுக்கு மரியாதை இருந்தால் பாண்டியாராஜன் இருக்கும் விழாவில் நீங்களும் பங்கேற்காதீர்கள். இது நான் உங்களுக்கு தரும் அரக்க டிப்ஸ், மற்ற அரக்க அமெரிக்கத்தமிழர்கள் காப்பி அடித்துக் கொள்ளலாம்.
பிறகு என்னை திட்டி தீர்க்கும் உங்கள் பெட்னா தமிழர்களிடன் என் சார்பாக ஒரு விசயம் சொல்லிவிடுங்கள். "இன்பர்மேஷன் ஈஸ் வெல்த் " என்று சொல்லும் பாய்ஸ் செந்திலாகவும் என்னால் இருக்கமுடியும். "நீங்க எல்லாம் திருடர்கள், நான் தேள்" எனச்சொல்லும் இரும்புத்திரை அர்ஜுனாகவும் இருக்கமுடியும். என்னை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது என்னை வெறுப்பேற்றாமல் இருப்பதில்தான் இருக்கிறது.
என் பதிலை ஆணவத்துடன் எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். இது ஆணவமல்ல, தைரியம். சமூகநீதி சுயமரியாதையினால் கிடைத்த துணிச்சல். இந்த துணிச்சல் இதைப்படிப்பவர்களுக்கும் வரவேண்டும், உங்களுக்கும் வரவேண்டும், ஆர்.எஸ்.எஸ் சாதி சங்க ஆட்களை களையும் மிகப்பெரிய பணியை நீங்கள் முன்னெடுக்க செயற்குழு தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்
பண்புடன்
வினையூக்கி செல்வா.

கருத்துகள் இல்லை: