செவ்வாய், 15 மே, 2018

நல்லகண்ணு : கமல் மாநாட்டில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கவில்லை”

கமல் அழைப்பு: நல்லகண்ணு மறுப்பு!மின்னம்பலம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெறும் விவசாய சங்கங்களின் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (மே 14) செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை, காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம். இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 19ஆம் தேதி சென்னை பெரியமேட்டில் உள்ள மெட்ரோ மேனர் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இந்த விரிவான உரையாடலுக்கு அனைத்து விவசாய அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், மாணவர்களை அழைக்கிறோம். இந்தக் குரலின் மூலம் உரையாடலுக்கான கதவுகளும், மூடப்பட்ட அணைகளின் கதவுகளும் திறக்க வேண்டும்’’ என்று கூறினார்.
மேலும், இந்தக் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடைபெறும் என்றும் கமல் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின், ரஜினிகாந்த், திருநாவுக்கரசர்,டிடிவி தினகரன், விஜயகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன் உட்படப் பலருக்கும் கமல் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ ஆர்.நல்லகண்ணுவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மே 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் ஆர்.நல்லகண்ணுவைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆர்.நல்லகண்ணு, திமுக தலைமையில் 9 அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருவதை அவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் மாநாட்டில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ ஒப்புதல் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர். நல்லகண்ணுவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, கூட்டத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: